ஊட்டி, நவ.22: ஊட்டியில் உள்ள இந்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என மக்களவையில் ஆ. ராசா எம்.பி. பேசியுள்ளது விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள முத்தோரை பாலாடாவில் இந்திய உருளைக்கிழங்கு விதை உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு புதிய ரக உருளைக்கிழங்கு விதைகள் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே இங்கு மட்டும்தான இந்த ஆராய்ச்சி மையம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களுக்கு பயன்பட்டு வருகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பல உருளைக்கிழங்கு விதைகளை நீலகிரி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகளும் பயிரிட்டு அதிக மகசூலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு, இந்த ஆய்வு மையத்தை மூடிவிட்டு வட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.அப்படி இந்த ஆய்வு மையம் வட மாநிலத்திற்கு சென்றால், அதிகமாக உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் நீலகிரி மாவட்டம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த உருளைக்கிழங்கு விவசாயிகள் மற்றும் தென் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த ஆராய்ச்சி மையத்தை வட மாநிலங்களுக்கு கொண்டுச் செல்லக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆ. ராசா எம்.பி. மக்களவையில் ேபசுகையில், இந்திய வேளாண்மை ஆய்வு மையத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பாலாடாவில் இந்திய விதை உற்பத்தி மற்றும் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது.
தென்மாநிலங்கள் அனைத்திற்கும் நோய் தாக்காத உருளைக்கிழங்கு விதைகளை விநியோகிப்பதோடு, விவசாயிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளையும் இந்த மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மையத்தை மூட இந்திய வேளாண்மை ஆய்வு மையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், தென் மாநிலங்களில் உருளைக்கிழங்கு உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தின் நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மையத்தை மூடிவிட்டால், உருளைக்கிழங்கு விதைகளுக்கு பஞ்சாப் மாநிலம் ஜலந்திரில் மட்டுமே ஆய்வு மையம் உள்ளது. இது, தென் மாநிலங்களில் இருந்து வெகு தொலைவில் ள்ளது. மேலும், வடமாநிலங்களில் பயிரிடப்படும் விதைகள் தென் மாநிலங்களின் பருவ நிலைக்கு ஏற்ப வர்வதில் சிக்கலும் உள்ளது. எனவே, ஊட்டியில் உள்ள உருளைக்கிழங்கு விதை ஆய்வு மைத்தை, மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், என்றார். நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி மையத்தை மூடக்கூடாது. வேறு மாநிலங்களுக்கும் மாற்றக் கூடாது என ஆ. ராசா எம்.பி. கோரிக்கை வைத்துள்ளது நீலகிரி விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.